தண்ணி அடிக்கனும்... கடையைத் திறங்கடா... குடிகாரர்கள் போராட்டம்
தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மூடப்பட்ட அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கோரி குடிகாரர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடமலைக்குண்டு அருகே மூலக்கடை கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் இந்தக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். இதையடுத்து அடுத்த நாளே கடை மூடப்பட்டது.
இதனால் குடிகாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இன்று காலை டாஸ்மாக் கடையைத் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஆண்கள் பலர் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து கோபத்துடன், ஏம்ப்பா, கடையை மூடக் கோரி பெண்கள் போராடுகிறார்கள். நீங்கள் திறக்கச் சொல்கிறீர்கள்... என்னய்யா பண்றது நாங்க என்று கேட்டனர்.
உடனே குடிகாரர்கள், டாஸ்மாக் கடைக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயிலாடும்பாறைக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கிருந்து மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வரும்போது போலீசார் போதையில் வாகனம் ஓட்டியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.
மேலும் போதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே இங்கு இருந்த கடையை மீண்டும் வழக்கம்போல் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று படு லாஜிக்காக போலீஸாரை மடக்கினர்.
ஆஹா.. நம்ம பக்கமே திருப்புறாங்களே என்று சுதாரித்த போலீஸார், சரி சரி தாசில்தார் அலுவலகத்தில் வைத்துப் பேசி முடிவு செய்யலாம். இப்போதைக்கு கிளம்புங்க என்று சமாதானப்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
போலீஸாரின் உத்தரவாதத்தை ஏற்று குடிகாரர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். அவர்களில் பலர் மயிலாடும்பாறைக்கு வண்டியை திருப்பினர் ... மது அருந்துவதற்காக!












Click it and Unblock the Notifications