கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நாளை மீனவர்கள் ஸ்டிரைக்: உதயகுமார் அறிவிப்பு
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நாளை மீனவர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அணு உலைக்கு எதிரான இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்களும், பொது மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தடை விதிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்க தடை இல்லை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என அணு உலைக்கு எதிரான இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்தார்.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய செயல்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி போராட்டக் குழுவினர் அடுத்த கட்டமாக நாளை (மே 14ம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலை நிறுத்ததிற்கு ஆதரவு திரட்டுவதற்காக உதயகுமார் கடல் வழியாக 4 படகுகளில் தனது ஆதரவாளர்களுடன் உவரி வந்தார். அங்கு வேளாங்கண்ணி மாதா ஆலயம் முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
நாளை குமரியில் இருந்து தூத்துக்குடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும். அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதையும் மீறி கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்குவோம் என்று அரசு அறிவித்தால் அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த அறிவிப்பால் இடிந்தகரை அருகே உள்ள தாமஸ் மண்டபம் விலக்கில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இடிந்தகரை மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications