சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு: 17 பேர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு மீனாட்சி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுற்று பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பென்சில் வெடிக்கு முனை மருந்து தடவி கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பட்டாசில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.
அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த மேலும் 2 அறைகளுக்கும் பரவியது. அங்கு குவிக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்தன.
பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் 3 அறைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிகிறது. தீ விபத்து ஏற்பட்டதும், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர். சிலர் தீயில் சிக்கி தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 அறைகளும் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்தில் 20 பேரின் உடல் கருகியது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார் இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications