சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்… முதியவர்களுக்கு இலவச பயணம்… அதிமுக நிறைவேற்றுமா?
சென்னை: அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஈராண்டு சாதனைகளை கொண்டாடும் அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகள் 18 மாதங்களிலே நிறைவேற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தின் போது அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது 24 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முக்கியமான பல வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன அவைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீருக்கு அல்லப்படும் நிலைதான் இன்னமும் உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு நாள்தோறும் 20 லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிறைவேற்றப்படுவது எப்போது?
நடமாடும் மருத்துவமனை
மாவட்டந்தோறும் நடமாடும் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இன்னும் அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலவச பேருந்து பயணம்
முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதிக்காகவே பல முதியவர்கள் அதிமுகவிற்கு வாக்களித்தனர். அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
மின் திருட்டு
மின்சார திருட்டை ஒடுக்க மின் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியிலேயே, அதிமுக கூறியிருந்தது. ஆனாலும் மின் திருட்டை இன்னமும் தடுக்க முடியவில்லை
தடையில்லா மின்சாரம்
மூன்று மணிநேர மின் தட்டுப்பாடு அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகரித்தது. மின்வெட்டினை குறைக்க நடவடிக்கை எதுவுமில்லை.
மீனவர்களுக்கு குளிர்சாதன பூங்கா
இவை மட்டுமல்ல, ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம், மீனவர்களுக்கு பயன்படும் குளிர்சாதன மீன் பூங்காக்கள், உள்ளிட்ட மேலும் பல வாக்குறுதிகள் இன்னும் அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளன. இந்த வாக்குறுதிகளும் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் அறிக்கையை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications