டெல்லி 181 அவசர சேவை போன்: ஒரு நாளைக்கு 1,500... 4 மாதத்தில் 2 லட்சம் அழைப்புகள்
டெல்லி: பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட அவசர சேவை எண்ணிற்கு நாளொன்றுக்கு 1500 அழைப்புகள் வரை பெறப்படுவதாகவும் நான்கு மாதத்தில் 2 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் போராடத் தொடங்கினர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளை அரசு அதிகரிக்க வேண்டும் என டெல்லியே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி சேவையை டெல்லி அரசு 31-12-2012 அன்று அறிமுகப்படுத்தியது. ஆபத்தில் இருக்கும் பெண்கள் '181' என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த மையத்தின் கட்டுப்பாட்டு அறை டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.இந்த சேவையின் செயல்பாட்டை முதல்வர் ஷீலா தீட்சித் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த எண்ணிற்கு மாதமொன்றுக்கு 50 ஆயிரம் அழைப்புகளும், நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 அழைப்புகளும் பெண்களுக்கான அவசர உதவி மையத்திற்கு வந்துள்ளது தெரியவந்தது.
இந்த சேவை எண் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் மட்டும் '181' எண்ணிற்குக்கு 2 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன என்பது தெரிய வந்தது.
அவசர சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்த ஷீலா தீட்சித், இதர மாநிலங்களும் இதைப் போன்ற மையங்களை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளன என கூறினார்












Click it and Unblock the Notifications