கிரிக்கெட் பெட்டிங்...: சென்னையில் 10 இடங்களில் போலீஸ் சோதனை! 6 பேர் கைது! 2 பேர் தலைமறைவு!!

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் புக்கிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் சென்னையில் "கிரிக்கெட் பெட்டிங்" நடைபெற்ற இடங்கள் குறித்து தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் , வடசென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.14 லட்சம் சிக்கியுள்ளது. மேலும் 10 லேப்டாப், 5 ஒயர்லெஸ் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் விருத்தாசலம் என்ற வேதாசலம் உட்பட 6 புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தப்பி தலைமறைவாகிவிட்டனர். இவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். விருத்தாசலத்தின் மேற்கு ஜோன்ஸ் சாலை அலுவலகம்தான் பெட்டிங்கில் ஈடுபட்டோர் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. இதற்காகவே தனி அலுவலக்ம் அமைத்திருக்கிறார் அவர். இதேபோல் அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல காபி ஷாப்பும் பெட்டிங்கில் ஈடுபடுவோர் கூடும் இடமாக இருந்திருக்கிறது.
தப்பி ஓடி தலைமறைவானவர்களில் பிரசாந்த் என்பவரை முக்கிய புக்கியாக போலீசார் கருதுகின்றனர். அவரது அயனாவரம் தர்ஷன் ரெசிடென்ஸியிலும் போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர். இவர்தான் அண்ணாசாலை காபி ஷாப்பை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் என்கின்றனர் சென்னை போலீசார் சென்னையில் தொடர்ந்தும் பல இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் மேலும் சில புக்கிகள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications