பல நன்மைகள்.. ஜெயலலிதாவிற்கு சரத்குமார், சேதுராமன் பாராட்டு
சென்னை: தமிழக மக்களுக்கு பல நன்மைகள் செய்து மரக்காணம் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டு நிறைவு செய்ததை ஒட்டி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நோய் இல்லாமை, செல்வம், விளைபொருள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகிய ஐந்தும் நாட்டுக்கு அழகு என்ற திருவள்ளுவரின் வாக்கியத் திற்கேற்ப தமிழகத்தை சீரும் சிறப்புமாக வழி நடத்தும் முதல்வரை பாராட்டுகிறேன்.
காவிரியை மீட்டு தந்து புரட்சித் தலைவி சாதானை படைத்துள்ளார். தமிழ் வாழும் வரை இச்சாதனை மறையாது. முதல்வரின் தொலைநோக்கு திட்டம் தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து இருக்க வழி வகுக்கும். முதல்வரால் அரசினர் தோட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நடை பெறுகிறது.
மின் உற்பத்தி, நிதி ஆதாரங்களை திரட்டுதல், பேருந்து நிறுத்தும் வசதியுடன் அடுக்கடுக்காக வணிக வளாகம் கட்டி மேம்படுத்துதல் என அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியது.
தமிழகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் அறிவித்துள்ளார். மரக்காணம் அருகே நடந்த கலவரத்தை இருப்புக்கரம் கொண்டு அடக்கி உள்ளார்.
விலையில்லா அரிசி வழங்கும் முதல்வரை பசிப்பிணி மருத்துவர் எனலாம். மிக குறைந்த விலையில் சென்னையில் உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இட்லி 1 ரூபாய்க்கும், சாதம் 5 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. சத்தான உணவுகள் ஏழைகளுக்கு கிடைக்க முதல்வர் வழி காட்டுகிறார். இவ்வாறு சரத்குமார் தனது பாராட்டுரையில் கூறியுள்ளார்.
மூமுக சேதுராமன் பாராட்டு
இதேபோல் மதுரையில் தமிழ்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளார்.
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ் வளர்த்த மதுரையை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த்தாய்க்கு அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு நிகராக சிலை மற்றும் தமிழ்ப்பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் வரவேற்கிறோம்.
வள்ளல் பாண்டித்துரைத் தேவனால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரையில் நூறாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்த தமிழ்ச் சங்கம் மேலும் வலுவடையும் வகையில் முதல்வர் அறிவிப்பு வந்திருக்கிறது.
எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் வீரப்பேரரசி வேலுநாச்சியார் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை எழுப்பி வந்தது. எங்கள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு வேலுநாச்சியார் விழா அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவித்துள்ளதும் பாராட்டத்தக்கது.
வரும் காலத்திலும், இது போன்ற பல நல்ல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications