வங்கதேசத்தில் 45 பேர் உயிரைக் குடித்த ’மகாசேன்': மீட்பு பணி தீவிரம்

வங்க கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. பின்னர் அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிட்டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேருடன் சாய்ந்தன.
பலத்த சேதம்...
ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ஏராளமான வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
10 லட்சம் மக்கள் வெளியேறினர்...
வெள்ளப் பகுதிகளில் இருந்து இதுவரை 10 லட்சம் பேர் வெளியேற்றப் பட்டுள்ளதாக வங்காளதேச அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 80 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
பலி 45 ஆனது...
மகாசேன் புயல் தாக்கியதில் வங்காளதேசத்தில் இதுவரை 45 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். புயல் மழையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும், நிவாரண பணிகளிலும் வங்காளதேச அரசு தீவிரமாக உள்ளது.
மீட்புப் பணி தீவிரம்...
கடற்படை கப்பல்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களும் ராணுவ வீரர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தை தாக்கிய புயலின் பாதிப்பு மியான்மரிலும் எதிரொலித்தது. அங்குள்ள ராஹின் மாகாணத்தில் பலத்த மழை பெய்தது.
பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம்...
அப்பகுதியில் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications