நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி கைது!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக சிபிஐ-ன் விசாரணைக் குழு தலைமை அதிகாரி விவேக் தத் லஞ்சப் புகார் ஒன்றில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
தொழில் அதிபர் ஒருவருக்கும் வேறொருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இதில் விவேக் தத் தலையிட்டு தொழிலதிபருக்கு சாதகமாக தாம் பிரச்சனையை முடித்து தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக ரூ7 லட்சம் லஞ்சமும் பேரம் பேசப்பட்டது.
இந்த லஞ்சப் பணத்தை விவேக் தத் சார்பாக சிபிஐ ஆய்வாளர் ராஜேஷ், சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வெளியே பணம் பெற்றுக் கொண்டார். அப்போது ராஜேஷ் சிக்கினார். அவரைத் தொடர்ந்து விவேக் தத், தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பணபரிமாற்றம் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும் அதனை அடுத்தே அவர்களை கையும் களவுமாக கைது செய்ததாகவும் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications