ஸ்ரீசாந்த் பெண்களுடன் கும்மாளம் போட்ட மும்பை ஹோட்டலில் ரெய்டு! தொடரும் கைது.. விரியும் போலீஸ் வலை!
மும்பை/டெல்லி: டெல்லியில் மையம் கொண்ட ஸ்பாட் பிக்சிங் புயலானது சென்னை, மும்பை என இந்திய நகரங்களைக் கடந்து உலக அளவிலும் விரிவடைகிறது...மும்பையில் ஸ்ரீசாந்த் பெண்களுடன் கும்மாளம் போட்ட நட்சத்திர ஹோட்டலில் போலீசார் ரெய்டு நடத்தினர். மும்பையில் மேலும் ஒரு புக்கியையும் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். அவர்களுடன் புக்கிகள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 6 பேரும் அடக்கம். இருப்பினும் இந்த விவகாரம் தற்போதைக்கு ஓய்வதாக இல்லை. பெரும் புயலையே கிளப்ப இருப்பதாகவே தெரிகிறது. மேலும் 8 முதல் 25 வீரர்களுக்கும் பிக்சிங், பெட்டிங்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

மும்பையில் ரெய்டு- ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்- புக்கி கைது
இதேபோல் இன்று மும்பையில் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர் ஜிஜூ தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் அறைகளில் மும்பை போலீசார் சோதனை நடத்தினர். இந்த ஹோட்டலில்தான் பெண்களுடன் ஸ்ரீசாந்த் கும்மாளம் போட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்கியிருந்த வெவ்வேறு அறைகளில் போலீசார் தீவிர ஆய்வு நடத்தினர். அங்கு கிடந்த லேப்டாப், ஐபோட் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் மும்பையைச் சேர்ந்த லோட்டஸ் என்ற புக்கியையும் கைது செய்துள்ளனர்.

சாண்டிலா வீட்டில் ரெய்டு
மேலும் மற்றொரு வீரரான சாண்டிலாவின் ஃபரிதாபாத் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்திய போலீசார் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத்தில் விசாரணை
குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்திலும் ஒரு புக்கியிடம் அம்மாநில போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஆந்திராவின் ஹைதராபாத் நகரங்களிலும் டெல்லி போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாவூத் கோஷ்டிக்கு தொடர்பு
இந்த மிகப் பெரிய பிக்சிங் மோசடியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கோஷ்டிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் புக்கிகள் அனைவருமே தாவூத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் துபாய் எண்களையே இந்த புக்கிகள் பயன்படுத்தியிருக்கின்றனர். இதனால் இந்த விசாரணை துபாய்க்கும் விரிவடைய வாய்ப்பிருக்கிறது.

குற்றவாளிகளுக்கு தண்டனை
ஐபிஎல் பிக்சிங் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதற்காக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படமாட்டாது என்று அதன் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

சசிதரூரின் தொடரும் ஆதரவு
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீசாந்த் என்பதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சசிதரூர் தொடர்ந்தும் ஸ்ரீசாந்த்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படும் வரையில் குற்றவாளியாக நடத்தக் கூடாது என்பது சசிதரூரின் கருத்து.

நாளை ஆலோசனை
இதனிடையே விஸ்வரூபமெடுத்திருக்கும் ஐபிஎல் பிக்சிங் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications