பாலியல் வன்முறை வழக்குகளை கடுமையாக அணுகவேண்டும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின், தவறான நடத்தையை தனக்கு சாதகமான ஆதாரமாக காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது. ஒரு பெண் ஏற்கனவே கற்பு இழந்தவர் என்பதால், அவரை கற்பழிக்க குற்றவாளிக்கு உரிமம் உண்டு என்று அர்த்தம் அல்ல, எனவே பாலியல் வன்முறை வழக்குகளை கடுமையாக கையாளவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பாலியல் வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கப்பெற்ற ஒருவர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தன்னால் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் தவறான நடத்தை கொண்டவர் என்றும், பலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டவர்தான் என்றும் கூறி இருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரிக்கப் பட்டது.பின்னர் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றம் அல்ல. இந்த சமூகத்துக்கே எதிரான குற்றம். ஒரு பெண் ஏற்கனவே கற்பு இழந்தவர் என்பதால், அவரை கற்பழிக்க குற்றவாளிக்கு உரிமம் உண்டு என்று அர்த்தம் அல்ல. இந்த வழக்கில், கற்பழித்தவர்தான் குற்றவாளியே தவிர, பாதிக்கப்பட்ட பெண் அல்ல.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின், தவறான நடத்தையை தனக்கு சாதகமான ஆதாரமாக காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது. பெண்ணின் தவறான நடத்தை என்பது பாலியல் வன்முறை வழக்கில் சம்பந்தம் இல்லாத விஷயம். ஏனென்றால், தவறான நடத்தை கொண்ட பெண்ணுக்கும் வாழ்வுரிமை உள்ளது. அவர் ஒன்றும் பாலியல் வன்முறைக்கு பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. பாலியல் உறவுக்கு உடன்பட மறுப்பதற்கு அப்பெண்ணுக்கு உரிமை உண்டு.
மனிதத்தன்மையற்ற செயல்
பாலியல் வன்முறை என்பது மனிதத்தன்மையற்ற செயல் மட்டுமல்ல, அது பெண்ணின் அந்தரங்க உரிமையிலும், புனிதத்தன்மையிலும் சட்டவிரோதமாக குறுக்கிடும் செயல். அவரது கண்ணியத்தையும், சுயமரியாதையையும் குலைக்கும் செயல்.
அதிலும், பாதிக்கப்பட்ட பெண் ‘மைனர்' ஆக இருப்பதால், அது அவருக்கு மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண்ணுக்கு உடலில் காயங்கள் ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவரது கண்ணியம், கற்பு, நற்பெயர், மரியாதை ஆகியவற்றில் மாறாத வடுவை குற்றவாளி ஏற்படுத்தி விட்டார். எனவே, இத்தகைய பாலியல் வன்முறை குற்ற வழக்குகளை நீதிமன்றங்கள் கடுமையாக அணுக வேண்டும்."என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications