கடலூரில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும்: சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கடலூரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு தடை விதிக்க கடலூர் போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். அதில் பேரணி நடத்த கோர்ட்டு தடை விதித்தது.
இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தற்போது புதுவையில் தங்கியுள்ளார். பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக கடலூரில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். 4 நாட்களுக்கு முன்னதாகவே இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று காலை திடீரென பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்த போது, பேரணிக்கு மட்டும் நீதிமன்றம் தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால் இன்று காலையில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுதான் நாங்கள் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். எனவே திட்டமிட்டபடி எங்களது பொதுக்கூட்டம் நடைபெறும் இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications