திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்: 82 பேர் மருத்துவமனையில்
ஈரோடு: ஈரோட்டில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோழி பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து 82 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் நேற்று நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் குமார் முருகேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு மதிய உணவாக கோழி பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பலர் அதை அங்கேயே சாப்பிட்டுவிட்டு கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் அந்த பிரியாணி பொட்டலங்களை எடுத்துச் சென்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 82 திமுகவினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
பிரியாணியை அலுமினிய முலாம் பூசப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்ததால் உணவு விஷமாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் சமையல் கான்டிராக்டர்களிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications