எதிர்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை: ஜெயலலிதா அரசுக்கு கருணாநிதி கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 13ம் தேதி அன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "அரசியல் கட்சி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் பாடுபடக் கூடியதாகவும், பொது மக்களின் நலனை முன் வைத்து செயல்படக் கூடியதாகவும், மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமெனில், அதனை ஜனநாயக ரீதியாக, அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
எதிர்ப்பை வன்முறை மூலம் தெரிவிப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், அவர்களை சமுதாயத்தின் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, சட்ட விரோத செயல்கள் எதிலும் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வது கட்சி தலைவர்களின் பொறுப்பும், கடமையும் ஆகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களில் எந்த கட்சி ஈடுபட்டாலும், அந்த கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்து இருந்தார்.
தருமபுரியில் 3 மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கு அதிமுக ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழக மக்களும் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, இந்த ஆட்சியினர் தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகளின் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். காவல்துறையினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் நடத்த இருந்த கூட்டத்திற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றும், அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைய மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன. கரூர் மாவட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி அன்று திருமண விழா, பொதுக்கூட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டபோது, அதற்காக விளம்பரத்தட்டிகளை வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
ஆட்சியிலே இருக்கும்போது, கடந்த காலத்தில் தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது என்னென்ன செய்தோம் என்பதையே மறந்துவிட்டு செயல்படுவது நல்லதல்ல. ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல. அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம். இது எச்சரிக்கை அல்ல. எண்ணிப்பார்ப்பதற்காக என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications