சென்னையில் கடும் அனல் அலை... 108 டிகிரி வெயில்... வெளியில் தலை காட்ட முடியவில்லை!
சென்னை: சென்னை நகரில் கடந்த சிலநாட்களாக இல்லாத அளவுக்கு இன்று கடும் அனலுடன் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியில் தலை காட்டவே அஞ்சும் அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே சென்னையில் வெயில் கடுமையாக இருக்கிறது. கடும் அனலுடன் வெயில் அடித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாலையில் நடந்தாலே தலை முதல் பாதம் வரை உடல் சூடேறி கொதித்துப் போய் விடுகிறது.

வழக்கைத் தலையா.. ஆப்பாயில்தான்
வழுக்கைத் தலையில் முட்டையை உடைத்து ஊற்றினால் உடனே ஆப்பாயில்தான்.. அப்படி ஒரு செம வெயில்.

இந்த சீசனில்இதுவரை இல்லாத அளவுக்கு
இந்த நிலையில் இன்று இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு 108 டிகிரி வெயில் போட்டுத் தாக்குகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகிறார்கள்.

வெறும் தலையுடன் போனால்
சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. டூவீலர்களில் போவோர் தொப்பி போட்டும், துணியால் சுற்றிக் கட்டியும் போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெறும் தலையுடன் போனால்... அவ்வளவுதான், வெந்து சாக வேண்டியதுதான்.

11ம் தேதி 106 டிகிரி அடித்தது
கடந்த 11ம்தேதி சென்னையில் 106 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கியது. அதன் பின்னர் இன்று 108 டிகிரியைத் தொட்டு விட்டது.

ஏன் இப்படி?
ஏன் இப்படி என்று வானிலை மையத்தாரிடம் கேட்டால், சென்னையில் வறண்ட வானிலையே நிலவும். உள்புற மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 6 செமீ மழை பெய்துள்ளது என்று அறிக்கை படிக்கின்றனர்.

பருவ மழை தொடங்கினால்தான்
தென் மேற்குப் பருவ மழை தொடங்கிய பின்னர்தான் தமிழகத்தில் வெப்பம் சற்று குறையும் என்றும் வானிலை மையம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications