ஓய்வு பெற்ற சிஏஜி தலைவர் வினோத் ராய் மத்திய அரசுக்கு எதிராக வீசிய 3 'அணுகுண்டுகள்'!

வினோத் ராய்
நாட்டின் தன்னாட்சி பெற்ற உயரிய அமைப்புகளில் ஒன்று மத்திய கணக்கு தணிக்கைத் துறை. இதன் தலைமை அதிகாரியாக 2008ஆம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல் மே 22-ந் தேதிவரை பொறுப்பு வகித்தவர் வினோத் ராய். அவரது ஆட்சிக்காலத்தில் 3 முக்கிய அணுகுண்டுகள், மத்திய அரசுக்கு எதிராக கணக்கு தணிக்கை துறையால் வீசப்பட்டன.
காமன்வெல்த் ஊழல்
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த மத்திய கணக்குத் தணிக்கை துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒலிம்பிக் சங்கத் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் கல்மாடியின் ஊழல்கள் அம்பலமானது. டெல்லி மாநில அரசும் கணக்குத் தணிக்கை துறையின் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. இந்த விவகாரத்தில் சுரேஷ் கல்மாடி சிறைக்குப் போக நேரிட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் கடைபிடித்த நடைமுறைகளை 2010ம் ஆண்டு தமது 2வது அறிக்கையில் விமர்சித்திருந்தது. 2001ஆம் ஆண்டு விலைக்கே 2008 ஆம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்பது அதன் முக்கிய குற்றச்சாட்டு. இதன் மூலம் ரூ1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று பெரிய அணுகுண்டை வீச பெரும் பிரளயத்தையே கிளப்பியது கணக்கு தணிக்கைத் துறை.
இந்த விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அவர் கைதும் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் உச்சகட்ட கிளைமாக்ஸாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9 நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை உச்சநீதிமன்றமே ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலக்கரி சுரங்க ஊழல்
2004 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்கள் முறைகேடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கை குற்றம்சாட்டியது. இதனால் 34 பில்லியன் டாலர் நாட்டுக்கு இழப்பு என்ற மற்றொரு அணுகுண்டையும் வீசியது கணக்குத் தணிக்கை துறை. அதுவும் பிரதமர் மன்மோகன்சிங் வசம், நிலக்கரித் துறை அமைச்சகம் இருந்தபோது இந்த ஒதுக்கீடு நடந்தது என்று கணக்குத் தணிக்கை துறை அறிக்கை சொல்ல... போதாதா எதிர்க்கட்சிகளுக்கு.. பெரும் பிரளயமே ஏற்பட்டது..
பிரதமருக்கு எதிரான இந்த வழக்கில் சிபிஐ-ன் விசாரணை அறிக்கையை திருத்தி தமது சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனிகுமார் இழக்க நேரிட்டது. அத்துடன் மத்திய அரசை இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காய்ச்சி எடுத்தது. சிபிஐ ஒரு கூண்டுக் கிளி என்று காட்டம் காட்டியது. சிபிஐ சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்று வறுத்தெடுத்தது..
இப்போது வினோத் ராய்..
அரசியல்வாதிகளை விழிபிதுங்க வைத்த வினோத் ராய், தற்போது ஐ.நா. சபையில் வெளிவிவகார கணக்கு தணிக்கைக் குழுவின் தலைவராக, சர்வதேச தலைமை கணக்கு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications