அந்த நாள் ஞாபகம் வந்ததே, டி.எம்.எஸ் நண்பனே...: கருணாநிதி உருக்கம்

இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது...
நல்ல நண்பர்கள்...
''1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் ‘மந்திரிகுமாரி' திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு.
வரலாற்றில் டி.எம்.எஸ்...
திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.
பாரம்பரியமான பாடல்கள்...
அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய மணம் குன்றாத பல பாடல்களைப் பாடினார். ‘சிந்தனை செய் மனமே', ‘நான் பெற்ற செல்வம்' முதலிய பாடல்கள் மறக்க முடியாதவை.
உணர்ச்சியைக் கொட்டும் குரல்...
திரை இசையில் அழகான மெல்லிசைப் பாடல்கள் தலை தூக்கியபோது, அந்தப் படலத்தில் சௌந்தரராஜன், முக்கிய பங்கு வகித்தார். அவருடைய இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, உணர்ச்சி பூர்வமான பாட்டு, நடிகருக்கு ஏற்றாற்போல குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை அவருக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்துள்ளன.
கச்சிதமான குரல்...
தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகிய இருவருக்கும் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தியதைப்போல் வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தவில்லை.
விருதுகளும், சாதனைகளும்...
1974 ஆம் ஆண்டில் இவருக்கு ‘கலைமாமணி' விருது வழங்கியது கழக அரசு; மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது' வழங்கிப் பாராட்டியது; இத்தகைய பல்வேறு விருதுகளாலும், பாராட்டுகளாலும் சாதனைகள் படைத்துள்ள டி.எம்.எஸ். அவர்களுக்கு அவர் பிறந்த மதுரையில் பாராட்டு விழா நடத்தவேண்டுமென்று மு.க.அழகிரி ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று அவரைப் பாராட்டச் செய்தார்.
இரங்கல்...
ஒரு சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டி.எம். சௌந்தரராசன் அவர்கள் இன்று மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்''என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications