ஐபிஎல் சூதாட்டம்.. சென்னை ஹோட்டல் உரிமையாளர் சிக்குகிறார்!
மும்பை: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் உரிமையாளரின் பெயர் அடிபட தொடங்கியுள்ளதாம். அவருக்கும், பிக்ஸிங்குக்கும் உள்ள தொடர்புகள் குறித்து மும்பை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனராம்.
இந்த ஹோட்டல் அதிபரின் பெயர் விக்டர் என்று கூறப்படுகிறது. இவரை நடிகர் விண்டு சிங்தான் சூதாட்ட புக்கிகளிடம் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்புடைய குருநாத் மெய்யப்பனிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாராம் சிங்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் கிளை ஹோட்டல் இந்த விக்டரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாம். புக்கிகள் சந்திரேஷ் ஜெயின் என்கிற ஜூபிடர், சஞ்சய், பவான் ஆகியோருடன் விக்டருக்கு நெருங்கிய நட்பு, தொடர்பு இருக்கிறதாம்.
போலீஸ் விசாரணையின்போது இந்தத் தகவல்களை விண்டு தெரிவித்தாராம். மேலும், திரையுலகைச் சேர்ந்த பலரையும் சூதாட்ட களத்திற்குள் விக்டர்தான் கொண்டு வந்ததாகவும் விண்டு கூறியுள்ளார்.
தற்போது விக்டர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. விரைவில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விடலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே, சென்னையிலேயே மிகப் பெரிய சூதாடி விக்டர்தான் என்ற புதிய தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. இவர் ஐபிஎல் போட்டிகளில் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பெட் கட்டியிருப்பதாகவும் போலீஸார் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications