ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: வீடியோ கான்பரென்சிங்கில் நாளை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா!

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
காவிரி தமிழகத்தைத் தொடும் எல்லையில் உள்ள இந்த இரு மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு இது.
மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டும் வறட்சி பாதித்த மாவட்டங்கள் ஆகும். இங்குள்ள நிலத்தடி நீரில் புளோரைடு உப்பின் அளவு 1.5 மில்லி கிராம் முதல் 12.4 மில்லி கிராம் வரை உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகம். வேறு வழியில்லாமல் இந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், மூட்டு தேய்மானம், முதுகெலும்பு, கை, கால் வளைதல், முடக்குவாதம் போன்ற பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா 2001-2006 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஜப்பான் நாட்டு நிதி உதவியோடு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இப்போது 3 - வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறார்.
இந்த குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.1,928 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. காவிரி ஆற்றில் இருந்து ஏறத்தாழ 1,150 மீட்டர் உயரத்திற்கு அதாவது 1.25 கிலோ மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை பம்பிங் செய்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீராகக் கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம் 9 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த முக்கியமான திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
அதே நேரத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே நடைபெறும் விழாவில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications