அசாமில் 9 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்!
கவுகாத்தி; அசாம் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் என விரிந்து கிடக்கும் மாவோயிஸ்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் வேரூன்றி வருவதாக அவ்வப்போது மத்திய அரசு தெரிவித்து வந்தது. கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து மிகப் பெரும் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தினர். இதில் 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது இந்த தாக்குதல்.
இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநில அரசு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருக்கிறது .. இதனால் இந்த 9 மாவட்டங்களையும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது.
அதாவது அசாமின் தின்சுகியா, திப்ரூகர், தேமாஜி, லக்மிபூர், கோலாகாட், சிவசாகர், கோல்பார, சச்சார், கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பது அசாம் அரசின் கோரிக்கை. இந்த 9 மாவட்டங்களில் மொத்தம் 103 போலீஸ் நிலையங்களில் 35 நிலையங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அசாம் அரசு குறிப்பிட்டிருக்கிறது. இந்த 9 மாவட்டங்களுமே அருணாசலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 9 மாவட்டங்களும் மத்திய அரசால் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆண்டு தோறும் ரூ10 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும்.












Click it and Unblock the Notifications