மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள்- ஜெய்ராம் ரமேஷ்! தாக்குதலை தீவிரமாக்குவோம்- ஆர்.பி.என். சிங்!!
டெல்லி: மாவோயிஸ்டுகளிடம் இனி இரக்கம் காட்டக் கூடாது.. அவர்கள் பயங்கரவாதத்தை பரப்புகின்றனர் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். இதேபோல் மத்திய இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதிகளே...
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெய்ராம் ரமேஷ், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது திட்டமிட்டே மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாவோயிஸ்டுகளிடம் இனி எந்த இரக்கமும் காட்டக்கூடாது. அவர்கள் பயங்கரவாதத்தை பரப்புகின்றனர். அவர்களது சித்தாந்தம் பணம் பறிப்பதை மையமாக உருமாறிப் போய்விட்டது.
அதாவது எங்களது சுதந்திர பகுதியில் வரவேண்டாம். அரசியல் ரீதியிலான செயல்பாடுகள் வேண்டாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போல மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அமைந்துள்ளது. இத்தகையதொரு நிலையை இந்தியா ஒருபோதும் ஏற்கக்கூடாது. மாவோயிஸ்டுகளுக்கு தங்கள் மீது நம்பிக்கை இருக்குமானால் தேர்தலில் பங்கேற்று தங்கள் பலத்தை நிரூபிக்கட்டும். மாவோயிஸ்டுகளின் துப்பாக்கி முனை, மறுமுனையில் பாதுகாப்புப்படையினர் என இரண்டுக்கும் இடையில் நின்று தவிப்பது பழங்குடிகள்தான் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
தாக்குதல் தீவிரமாகும்..
இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், நக்சல்களின் கொடூரமான படுகொலைகள் கடந்த 6 மாதங்களாக அதிகரித்துள்ளன. நக்சல்களுக்கு எதிரான கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையை மாவோயிஸ்டுகள் கைவிடாதவரை பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.
நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் விஷயத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளோம். முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிதியை, சில மாநில அரசுகள் செலவிடாமல் அப்படியே வைத்துள்ளன. வளர்ச்சிப் பணிகளை நடத்தி, அதன் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்தும் வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என்றார்.
மேலும் நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் ராணுவம் பயன்படுத்தப்படமாட்டாது. துணை ராணுவப்படையினர் போதிய எண்ணிக்கையில் அனுப்பிவைக்கப்படுவார்கள். ஒடிஷாவின் சில பகுதிகள், மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி ஆகிய பகுதிகளிலும் நக்சல்களின் ஆதிக்கம் சரிவடைந்து வருகிறது. இந்த மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications