மெய்யப்பனை மும்பை சிறையில் சந்தித்து பேசிய மனைவி ரூபா, அம்மா லலிதா
ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த வாரம் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரை மும்பை குற்றிப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்றுடன் அவருடைய காவல் முடிவதால் அவரை இன்று மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.
வரும் 31ம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மெய்யப்பனை அவரது மனைவி ரூபா மற்றும் தாய் லலிதா ஆகியோர் நேற்று முன்தினம் மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து சந்தித்து பேசினர்.
மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து சீனிவாசனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.