200 அடி போர்வெல்லில் விழுந்த 4 வயது சிறுமி 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு
பால்வால்: ஹரியானாவில் 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில் உள்ள அமர்பூர் கிராமத்தில் தனது தாய் மாமாவின் வீட்டுக்கு 4 வயது சிறுமி தனது தாயுடன் சென்றுள்ளார். நேற்று மதியம் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இது குறித்து அறிந்த கிராமத்தினர் அங்கு கூடிவிட்டனர். சிறுமியின் உறவினர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புக்குழுவோடு சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ஜேசிபி இயந்திரத்தை வைத்து குழி தோண்டினர். சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார்.