செவ்வாய்கிரகத்தில் எலி... திடீர் பரபரப்பு!
டோக்கியோ: செவ்வாய் கிரகத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்று வெளியிட்ட படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா... ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மூலம் 7 விண்கலங்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.
இவை பல ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள், பல்வேறு தாதுக்கள் உள்ளதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளன. ஆனால் உயிரினங்கள் இருந்தது குறித்து எந்தத் தகவலும் அவற்றில் இல்லை. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஒரு விஞ்ஞான ஆர்வலர் தான் நடத்தும் ப்ளாகில், நாசாவின் க்யூரியாசிட்டி எடுத்தனுப்பிய புகைப்படத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாகக் கூறி அந்தப் படத்தை வெளியிட்டிருந்தார்.

நான்கு கால்கள் மற்றும் வாலுடன் காட்சி தரும் அந்த உருவத்தைப் பார்த்து நாசா அதிர்ச்சியடைந்துவிட்டது. காரணம் படத்தை வெளியிட்டதே அந்த அமைப்புதானே. தங்களுக்கு தெரியாத இந்த விஷயம் எப்படி ஜப்பான் ப்ளாக்கருக்கு தெரிந்தது என்று முதலில் திகைத்தனர். பின்னர் தான் இது ஒரு பாறையின் வடிவம் என்றும், பார்க்க எலி மாதிரியே உள்ளதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரதம் பற்றி வெளியான மற்றொரு படத்தில் ஒரு பெண் சிலை இருப்பது போல சித்தரித்து பரபரப்பு கிளப்பியது நினைவிருக்கலாம். எனினும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து அறிவியல் சோதனைகள் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications