சுதாகரன் கல்யாணத்துக்கு மாமனார் தோப்பிலிருந்து 2000 தேங்காய் கொடுத்தேன்.. ஓ.எஸ்.மணியன்
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கல்யாணத்தின்போது எனது மாமனாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பிலிருந்து 2000 தேங்காய்களைப் பறித்துக் கொடுத்தேன் என்று பெங்களூர் கோர்ட்டில் அதிமுக எம்.பி. ஓ.எஸ்.மணியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று மணியன் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது மணியன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி மயிலாப்பூரில் வி.என்.சுதாகரன் திருமணம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ள ஜெயலலிதா வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. திருமணத்துக்கு வரும் அதிமுக தொண்டர்களுக்கு விருந்து கொடுக்கலாம் என நான், ஆதிராஜாராம், தங்கமுத்து ஆகியோர் முடிவு செய்தோம்.
நான் எனது மாமனாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்து 2 ஆயிரம் தேங்காய்களை சப்ளை செய்தேன். உணவுக்கான மொத்த செலவை நாங்கள் மூவரும் ஏற்றோம். சமையல் செய்வதற்காக கிருஷ்ணன், ராஜா, கணேஷ் அய்யர், கோபாலகிருஷ் ணன் ஆகிய 4 சமையல் கலைஞர்களை அமர்த்தினோம். அவர்களுக்கு கட்டணமாக தலா ரூ.17 ஆயிரம் கொடுத்தோம்.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் எங்களிடம் விசாரணை நடத்தியபோது, விவரமாக தெரிவித்ததுடன், எழுத்து மூலமாக எழுதியும் கொடுத்தோம் என்றார் மணியன்.
இதைத் தொடர்ந்து விசாரணை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications