ரேஷன் சர்க்கரை மானியம் குறைப்பு: பிரதமருக்கு ஜெயலலிதா கண்டனம்
சென்னை: ஏழை மக்கள் பயனுறும் வகையில் மலிவு விலையில் ரேஷனில் சர்க்கரை வழங்க முடியாத அளவுக்கு புதிய முறையை மத்திய அரசு புகுத்தியுள்ளதாக கூறி முதல்வர் ஜெயலலிதா தன் கண்டனத்தை கடிதம் வாயிலாக பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
இதனால், மாநில அரசுக்கு நிதிச்சுமை கூடுகிறது, மேலும், இதனால் அதிகளவில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா இதுகுறித்து நேற்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
ரேஷனில் சர்க்கரை வழங்குவதற்காக, சர்க்கரை ஆலைகள் மத்திய அரசுக்கு குறிப்பிட்ட அளவு சர்க்கரையை வழங்க வேண்டும் (லெவி) என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த விதிமுறையை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்து விட்டது.
இதற்கு எனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ரேஷனில் சர்க்கரை வழங்குவதை பாதிக்கும். அது மட்டுமல்லாது, ஏழை எளிய மக்களை இது மிகக் கடுமையாகப் பாதிக்கும்.
மூன்றில் ஒரு பங்கு மட்டுமே...
தமிழகத்துக்கு மத்திய அரசு மாதந்தோறும் 10 ஆயிரத்து 835 மெட்ரிக் டன் சர்க்கரையை ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழக அரசு ரேஷன் மூலம் வழங்கும் சர்க்கரையில் இது மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனால் மாநில அரசு ஏற்கெனவே கடும் இழப்பை சந்தித்து வருகிறது.
இப்போது மத்திய அரசு புதிய நடைமுறையை புகுத்தியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு ரூ.18.50 என்ற அளவில் மானியம் வழங்கும். ஆனால், சர்க்கரையை மாநில அரசு வெளிச் சந்தையில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தெளிவாக இல்லை...
அது மட்டுமல்லாது, இந்த மானியம் நடப்பு நிதியாண்டு (2013-14) மற்றும் அடுத்த நிதியாண்டுக்கு (2014-15) மட்டுமே கிடைக்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டுக்குப் பிறகு இந்த ஏற்பாடு தொடர்ந்து நீடிக்குமா அல்லது நீடிக்காதா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை.
லெவி சர்க்கரை நிறுத்தம்...
சர்க்கரை ஆலைகளிடம் இருந்து கட்டாயமாக மத்திய அரசு கொள்முதல் செய்து வந்த சர்க்கரையை (லெவி) நிறுத்தியது கண்டனத்துக்கு உரியது. சந்தையில் சர்க்கரையின் விலை அவ்வப்போது மாறக் கூடும். வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.32-ஐ கடந்தால் அதற்கான கூடுதல் தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாநில அரசு கடும் நிதிச்சுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போது புகுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையானது ரேஷனில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த முடியாத தன்மையை உருவாக்கி விட்டது.
ரேஷனில் விநியோகிக்கப்படும் மொத்த சர்க்கரையையும் வெளிச்சந்தையிலேயே வாங்க வேண்டிய நிலைக்கு மாநில அரசை மத்திய அரசு தள்ளிவிட்டது.
கடும் நெருக்கடி...
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இந்த முடிவு, ரேஷனில் வழங்கும் சர்க்கரையை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. அவர்களது நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பொது விநியோகத்துக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்த சர்க்கரையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது தவறான முடிவாகும்.
வாபஸ் பெற வலியுறுத்தல்...
இந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அல்லது வெளிச் சந்தையில் நிலவும் சர்க்கரை விலைக்கும், ரேஷனில் விநியோகம் செய்யப்படும் சர்க்கரை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
மேலும், இந்த ஏற்பாடு அடுத்த நிதியாண்டுக்குப் (2014-15) பிறகும் தொடர்ந்து நீடிக்க வேண்டும்' என இவ்வாறு தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications