தர்மபுரியில் 100 கிலோ வெடிப்பொருள் மாயம்: போலீஸ் விசாரணை
தர்மபுரி: பாலக்கோடு அருகில் வனப்பகுதி குவாரியில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோ வெடி மருந்து மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் வெடி வைக்க அரசு அனுமதியுடன் சிலர் வெடி மருந்துகள் வைத்துள்ளனர். சிலர் அரசு அனுமதி இல்லாமலும் வைத்துள்ளனர்.
இதில், பாலசுப்பிரமணி என்பவரின் குவாரி செயல்பட்டு வருகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு 100 கிலோ கரி வெடி மருந்து, வெடி வைக்க பயன்படுத்தும் சேப்டி ஒயர் 1200 மீட்டர் ஆகியவை குவாரியில் இருந்ததாகவும், அவை மாயமானதாகவும் குவாரி உரிமையாளர் பாலசுப்பிரமணி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டை, தளி, பஞ்சப்பள்ளி முழுவதும் வனப்பகுதியாகும். மேலும் நக்சலைட்டுகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், வெடிமருந்து மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications