சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு!: செலவு ரூ. 82,000 கோடி!!
டெல்லி: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது.

ரூ. 82,000 கோடி செலவாகும்:
நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்படும். இதற்காக இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் ரூ. 62,000 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ. 82,000 கோடி செலவாகும் என்று தெரிகிறது.

நிதியமைச்சகம் அனுமதி:
இந்தப் படையை உருவாக்குவதற்கான அனுமதியை பாதுகாப்புத்துறைக்கான அமைச்சர்கள் குழு விரைவில் வழங்கவுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் நிதியமைச்சகத்தின் அனுமதி பெறப்படும்.

2 காலாட் படை பிரிவுகள், 2 கவச வாகனப் படை பிரிவுகள்:
இந்தப் படையில் இரண்டு காலாட் படை பிரிகேடுகளும் (infantry brigades), இரு கவச வாகனப் படை பிரிவுகளும் (armoured brigades) அடங்கும்.

இந்திய-திபெத் பார்டர் போலீஸ் படை:
சீன எல்லையை ராணுவத்தின் இந்திய-திபெத் பார்டர் போலீஸ் படை (ITBP) தான் இப்போது கண்காணித்து வருகிறது. ஆனால், இதனால் எல்லை ஊடுருவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந் நிலையில் தான் புதிய படைப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தலைமையகம்:
இந்தப் படைப் பிரிவின் தலைமையகம் மேற்கு வங்கத்தின் பனாகர்க் பகுதியில் அமையவுள்ளது.
இந்தப் படை உருவாக்கப்பட்டால், ஒருவேளை இந்தியா மீது சீனா தாக்குதல் தொடுத்தால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மீது உடனடியாக இந்தியாவால் பதிலடி தாக்குதலைத் தொடுக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப் படைத் தளங்களையும் அமைக்க இந்தியா திட்டம்:
கடந்த 2009ம் ஆண்டில் அருணாச்சல் பிரதேசத்தில் அடிக்கடி ஊடுருவலில் ஈடுபட்டு வந்த சீன ராணுவத்தைத் தடுக்க அஸ்ஸாமை தலைமையிடமாகக் கொண்டு இரு காலாட் படைப் பிரிவுகளை இந்தியா உருவாக்கியது நினைவுகூறத்தக்கது. இந்தப் படைகள் அஸ்ஸாமின் லெகாபாணி, மிஸாமாரி ஆகிய பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இவை தவிர சீன எல்லையில் எவுகணைப் படைப் பிரிவுகளையும், புதிய போர் விமானப் படைத் தளங்களையும் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சீனா குவித்து வைத்துள்ள படைகள்:
இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே ஏராளமான படைகளைக் குவித்து வைத்துள்ளதும், எல்லை வரை 58,000 கி.மீ. தூரத்துக்கு பல அடுக்கு சாலைகளை போட்டு வைத்துள்ளதும், 5 விமானப் படைத் தளங்களை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சீனா 3, இந்தியா 1:
இந்த வசதிகளால் சீனா நினைத்தால் எந்த நேரத்திலும் தலா 15,000 படை வீரர்களைக் கொண்ட 30 டிவிசன்களை இந்தியாவுக்குள் அனுப்பிட முடியும். இந்தியாவால் இதில் 3ல் ஒரு பங்கு படைகளையே சீனாவுக்குள் அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications