கான்ட்ராக்டர் வீட்டில் புகுந்த திருடர்கள்.. 110 நகை கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீடு புகுந்த திருடர்கள், அங்கிருந்த 110 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியின் தென் பகுதியை சேர்ந்தவர் சீலன். கட்டிட கான்ட்ராக்டரான இவரது மனைவி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி சீலன் தனது மகனை திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்தினருடன் திருப்பூர் சென்றார்.
இன்று காலை திருப்பூரில் இருந்து தூத்துக்குடி வந்த சீலன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி போடப்பட்டு இருந்ததுடன், பீரோவில் இருந்த 110பவுன் தங்க நகை மற்றும் 20ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
கொள்ளை போன தங்கநகைகளின் மதிப்பு 20லட்ச ரூபாய் ஆகும்.
தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். துப்பறியும் மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
கொள்ளை தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர் தகவல் சொல்வதற்கு மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள் மாநகர மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications