அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்: நோயாளிகளுக்கு மலிவு விலை உணவு
சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் என வாழ்க்கையில் கஷ்டப்படும் அனைவரும் வயிறார சாப்பிடவேண்டும் என்பதற்காக திறக்கப்பட்டது அம்மா உணவகம். இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்ற உணவுகளை சாப்பிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.தற்போது இந்த திட்டம் சேலம், கோவை, திருச்சி உள்பட மற்ற 9 மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில்
இந்த நிலையில் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த மாத இறுதிக்குள் அம்மா உணவகத்தை துவக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் பகுதிக்கு அருகில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
7 இடங்களில் உணவு
அரசு மருத்துவமனை மிகப்பெரிய பகுதியாக இருப்பதால் மேலும் 7 இடங்களில் உணவு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2 டவர் பிளாக் மற்றும் முக்கிய துறைகளில் நோயாளிகளின் உறவினர்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
அங்கு தினமும் 12 ஆயிரம் புற நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 3 ஆயிரம் உள்நோயாளிகள் தங்கி இருக்கிறார்கள். அவர்களை அருகில் இருந்து கவனித்து வரும் உறவினர்கள் ஓட்டல்களில் வாங்கிதான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அம்மா உணவகம் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மருத்துவமனை வளாகத்தில் 5 ஆயிரம் சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி ரூ.9.8 லட்சம் மதிப்பில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 7-ந்தேதி மதியம் 3 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு தகுதியான ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன்பிறகு பணிகள் வேகமாக முடிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் வரவேற்பு
மருத்துவமனைகளில் அம்மா உணவகம் திறக்கப்பட்டால் பார்வையாளர்களும், உதவியாளர்களும் அலைந்து திரியாமல் அங்கு கிடைக்கும் உணவுகளை எளிதாக மலிவான விலையில் வாங்கி சாப்பிடலாம். மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்களை விட அரசு பொது மருத்துவமனையில் அமைக்கின்ற உணவகத்தில் அதிக அளவு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்படுவதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.