குஜராத் இடைத் தேர்தல்: 2 லோக்சபா, 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வெற்றி- காங். படுதோல்வி
அகமதாபாத்: குஜராத்தில் நடந்த இடைத் தேர்தலில் 2 லோக்சபா தொகுதிகளிலும் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது.
இந்த 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்டுள்ளது.
இத்தனைக்கும் இந்த 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் வசம் இருந்தவை ஆகும். இந்தத் தொகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

போர்பந்தர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் விட்டல் ரடாடியா 1.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வினு அமிபாராவை வென்றார். இத்தனைக்கும் விட்டல் ரடாடியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் தான் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் ஜெய்ஸ் ஜேட்பூர் சட்டமன்றத் தொகுதியிலுல் வென்றுள்ளார். இவரும் சமீபத்தில் தான் தந்தையுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
அதே போல பனஸ்கந்தா நாடாளுமன்றத் தொகுதியையும், லிம்பாடி, மோர்வா ஹதவ், தோராஜி சட்டமன்றத் தொகுதிகளையும் பாஜகவே வென்றுள்ளது.
182 பேர் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் இப்போது பாஜகவிடம் 115 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் வசம் 57 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரசிடம் 2 எம்எல்ஏக்களும், குஜராத் பரிவர்த்தன் கட்சி (கேசுபாய் படேல் கட்சி) 2 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளம் வசம் ஒரு எம்எல்ஏவும், ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications