முதல்வர்கள் மாநாடு: நிதீஷ் குமாரை தவிர்த்த நரேந்திர மோடி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் முக்கியக் கட்சியாகும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். இதற்கு, நிதீஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், மதச்சார்பற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார். இதனால் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே கசப்புணர்வு நிலவி வருகிறது.
இந்நிலையில் நக்ஸல்களை ஒடுக்குவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை வந்தார் நரேந்திர மோடி. அப்போது சட்டீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங்குடன் நிதீஷ் குமார் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், அந்த இடத்தில் நிற்காமல் சென்று சென்றுவிட்டார் மோடி. நிதீஷ் குமாரைத் தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
வழக்கமாக முதல்வர்கள் கூட்டத்தில் கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைத்து முதல்வர்களையும் தானே அவர்களது இருக்கைக்கே சென்று சந்திக்கும் வழக்கம் கொண்டவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணி உடையும் என்கிறது காங்கிரஸ்:
இந் நிலையில் நரேந்திர மோடி மற்றும் நிதீஷ் குமாரும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளாததால் தேசிய ஜனநாயக கூட்டணி விரைவில் உடையும் வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஹரீஸ் ராவத் கூறுகையில்,
கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு மோடி முன் நிறுத்தப்படுவதை நிதீஷ் குமார் கடுமையாக எதிர்த்து வருகிறார். பிகாரில் முஸ்லீம்கள் அதிகமாக உள்ளதால் மோடிக்கு ஆதரவு அளிப்பதில் நிதீஷ் தயக்கம் காட்டி வருகிறார். அவர், பாஜகவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளவும் தி்ட்டமிட்டுள்ளார்.
இன்று முதல்வர்கள் கூட்டத்தில் மோடியும், நிதீஷ் குமாரும் ஒருவரை ஒருவரை சந்திப்பதை தவிர்த்துள்ளனர். இதனால் பாஜக கூட்டணி நெடுங்காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அது விரைவில் உடையும் வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications