தஞ்சையில் சொத்து பிரச்சனையில் மகனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற தாய்
தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்சனையில் பெற்ற மகனையே தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு சாலை தெருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி வள்ளியம்மை(60). அவர்களின் மகன்கள் கண்ணதாசன்(35) மற்றும் தேவதாசன்(32). அதில் கண்ணதாசனுக்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு 8.30 மணிக்கு சொத்து பிரச்சனை குறித்து கண்ணதாசன், அவரது தாய் மற்றும் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது வள்ளியம்மை தனது இளைய மகன் தேவதாசனுடன் சேர்ந்து மூத்த மகன் கண்ணதாசனை உருக்கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணதாசன் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கண்ணதாசனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது வள்ளியம்மையும், தேவதாசனும் அக்கம்பக்கதினரையும் தாக்கி கண்ணதாசனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். உடனே இது குறித்த தகவல் பரவாக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்றிருந்த கண்ணதாசனின் மனைவி சுகன்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் சுகன்யா விரைந்து வந்து தனது கணவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கண்ணதாசன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பட்டுக்கோட்டை போலீசார் தேவதாசனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வள்ளியம்மையை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications