பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்: சர்வேயில் அதிர்ச்சி தகவல்
கராச்சி: பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பல இந்துக் குடும்பங்களில், தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன் வருவதில்லையாம். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது நல நிறுவனம் ஒன்று தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், இந்து சேவா பொதுநல நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டது. அதில் பாகிஸ்தானிய இந்து குடும்பங்கள் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குவதாக அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளதாம்.
இது குறித்து பாகிஸ்தான் இந்து சேவா பொதுநல நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தர் கோஹ்லி தெரிவித்ததாவது, ‘சிறுமிகள் கடத்தல், பலவந்த மதமாற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட (தலித்) மக்கள், தங்களது பெண் குழந்தைகளை ஆரம்ப பள்ளிகளில் கூட சேர்ப்பதில்லை.
பள்ளிக்கு அனுப்புவதைவிட வயல் வேலைகளிலோ, ஆடு, மாடு, கோழி, வாத்து போன்றவற்றை மேய்க்கும் வேலைகளிலோ சிறுமிகளை ஈடுபடுத்தவே பெற்றோர் விரும்புகின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நடத்திய கணக்கெடுப்பில் இங்கு இந்து மக்கள் பெரும்பாண்மையாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என இரு வகையாக பிரிந்துள்ளனர். உயர் சாதி இந்துக்கள் 15 சதவீதம் பேர், தாழ்த்தப்பட்ட தலித் உள்ளிட்ட பிற சாதியினர் மீது பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலித்களில் 42 பிரிவு இந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். அவர்கள் ஏழைகளாகவே உள்ளனர்.
பாகிஸ்தானில் வாழும் தலித் இந்துக்களின் 16 சதவீதம் மக்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள். மேல்நிலை பட்டதாரிகளாக எந்த தலித்தும் இன்னும் உருவாகவில்லை.
இதுதொடர்பாக, விரைவில் பிரதமராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷெரீப்பை சந்தித்து தலித் மக்களின் தாழ் நிலையை மேம்படுத்தி, முஸ்லிம் அடிப்படைவாதிகள் மற்றும் உயர்சாதி இந்துக்களிடம் இருந்து தலித் இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும்படி எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை எழுப்புவோம்' எனக் கூறினார்.