புறம்போக்கு நிலத்துக்கு பட்டா: கருணாநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சென்னை: திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க. அழகிரி ஆகியோர் பெயருக்கு புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்கியது செல்லாது என்று அறிவிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவாரூர் மாவட்டம், தாழத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், திருவாரூர் மாவட்டம் காட்டூரில், காதர் முகைதீன் என்பவரிடமிருந்து சுமார் அரை ஏக்கர் நத்தம் புறம் போக்கு நிலத்தை கடந்த 8.4.1953 அன்று கருணாநிதி வாங்கியுள்ளார். இந்த நிலத்துக்கான பட்டாவை வாங்காமலேயே 46 ஆண்டுகளாக அவர் நிலத்தை வைத்திருந்தார்.
இதற்கிடையே நத்தம் புறம்போக்கு நிலத்தை நீண்ட நாள்களாக வைத்திருக்கும் நிலமற்ற ஏழைகள் பெயரிலேயே அந்த நிலத்துக்கு பட்டா வழங்கும் திட்டத்துக்கான அரசாணை 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.அந்தத் திட்டமானது 1996ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது.
ஆனால், 1999ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த நிலத்துக்கான பட்டாவை அவரது பெயருக்கும், மு.க.அழகிரி பெயருக்கும் குடவாசல் தாசில்தாரிடம் இருந்து பெற்றுள்ளார்.
இத்தகைய பட்டா வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு கிடையாது. ஆகவே, காட்டூரில் உள்ள புறம்போக்கு நிலத்துக்கு கருணாநிதி மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் பெயருக்கு பட்டா வழங்கியது செல்லாது என்று கூறி, அந்தப் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அமர்வு விசாரித்து, இந்த வழக்கு விளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.