திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்த 70 வயது முதிய தம்பதி படுகொலை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோவளம் அருகே திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதிய தம்பதி படுகொலை செய்யப்பட்டனர்.
முதியவரின் பெயர் திவாகரன். 70 வயதாகும், இவர் திரேசம்மாள் என்ற 76 வயது மூதாட்டியுடன் தனியாக வசித்து வந்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தங்களது குடும்பம், குழந்தைளை விட்டுப் பிரிந்து வந்து வாழத் தொடங்கினர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இணைந்து வாழ்ந்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கோட்டக்கல் பகுதிக்கு இருவரும் இடம் பெயர்ந்து வந்து வாழ்ந்தனர். சில நாட்களாக இவர்கள் இருந்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. வீட்டிலிருந்து துர்நாற்றமும் வந்தது.
அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, இருவரும் பிணமாகக் கிடந்தனர். உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. ரத்தம் வழிந்தோடி உறைந்து கிடந்தது.
ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. வீட்டில் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொலை செய்திருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications