இலங்கை பிடித்துச் சென்ற 49 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுங்கள் - பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 49 தமிழக மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக கடந்த 5-ந்தேதி கடலில் 10 இயந்திர படகுகளில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 49 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு மூர்க்கத்தனமான சம்பவத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடலில் 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சட்ட விரோதமாக கடத்திச்செல்லப்பட்டு, தலைமன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக மீனவர்களின் ஒரு படகை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்ததுடன் ஈவு இரக்கமின்றி கவிழ்த்த சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டு அவர்கள் அனைவரும் பத்திரமாக கரைக்கு திரும்பி உள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும், கடத்திச்செல்லப்பட்டு தாக்கப்படுவது குறித்தும் தங்களுக்கு தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசின் அக்கறையின்மையும், எவ்வித நடவடிக்கை எடுக்காததும்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன.
இலங்கை கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்டுவிடுவோமோ, தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் தங்கள் பாரம்பரிய கடல்பகுதியில் தமிழக மீனவர்களால் மீன்பிடிக்க முடியவில்லை. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் கடும் கொந்தளிப்பில் உள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு நான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை. அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ராஜதந்திர ரீதியாக இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை.
பாக். ஜலசந்தியில் மீன்பிடிக்கும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வன்முறையாக கடத்தப்படும் சம்பவங்கள் முதல் சமீபத்திய சட்டவிரோத கைது நடவடிக்கை வரையிலான சம்பவங்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்புமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அப்பாவி தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதற்கு இந்திய அரசாங்கம் தனது கடும் கோபத்தை இலங்கை அரசுக்கு தெரிவிப்பதுடன் இதுபோன்று அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதையும் உறுதிபடுத்த வேண்டும்.
இந்த பிரச்சினையை இலங்கை அரசிடம் உடனடியாக எடுத்துச்சென்று, சிறைபிடிக்கப்பட்டு உள்ள 49 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பத்திரமாக விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உறுதியாக உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications