பெரம்பலூரில் கவுரவக் கொலை?… காதல் திருமணம் செய்த வாலிபர் மர்ம மரணம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். அவர் கவுரவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுகுடல்வாலி கண்டபுரம் செல்லும் வழியில் ஒரு வாலிபர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக இன்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அந்த வாலிபர் யார் என விசாரணை நடத்தினர்.விசாரணையில், அந்த வாலிபர் பெரம்பலூர் ஆலம்பாடியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் என்பது தெரியவந்தது.
பார்த்திபனும் அதே ஊரை சேர்ந்த பழனி என்பவரது மகள் ஒச்சம்மாளும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், எதிர்ப்புகளை மீறி மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்திபன், ஒச்சம்மாளை திருமணம் செய்து கொண்டார். பிறகு ஒச்சம்மாளும், பார்த்திபனும் அதே பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற பார்த்திபன் வீடு திரும்பவில்லை.
ஒச்சம்மாளை, பார்த்திபன் திருமணம் செய்து கொண்டது அவர்களது சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், ஒச்சம்மாளின் சகோதரர் தங்கப்பாண்டியன் தான் பார்த்திபனை நேற்று மாலை வெளியில் அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கப்பாண்டியன் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் ஒச்சம்மாளின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் மீது அவ்வப்போது நடத்தப்படும் கவுரவ கொலை இன்று பெரம்பலூரில் அரங்கேறியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை அவரது அண்ணனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது பெரம்பலூரில் நடைபெற்றுள்ள கவுரவக் கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications