தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடும் மாவோயிஸ்டுகள்: எச்சரிக்கும் ராம. கோபாலன்
சென்னை: தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் நக்சல்பாரி மாவோயிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகள் இல்லை என்று காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் திரும்பத்திரும்ப சொல்லி வருவது தமிழக அரசையும், மக்களையும் திசைத் திருப்ப செய்யும் செயலோ என சந்தேகம் வருகிறது.
சமீபத்தில் இந்து முன்னணி ஒரு குழு அமைத்து விசாரித்ததில், பெரியகுளம், கொடைக்கானல், வருசகாடு உள்காடு, திண்டுக்கல், தேனி, அரியலூர், மதுரை, கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், திருப்பூர், காங்கேயம், வெள்ளக்கோவில் ஆகிய இடங்களில் வெளிப்படையாக நக்சல்பாரி செயல்படுவது தெரிய வந்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் உயர் அதிகாரிகளின் தலைமையில் பத்திரிகையாளர்கள், தேச பக்தர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து நேர்மையாக நக்சல்பாரிகள் நடமாட்டம் குறித்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.