எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் ரேண்டம் எண் வெளியீடு…
சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 சீட்டுகளும், அதே போல் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் 838 எம்.பி.பி.எஸ். இடங்களும், 909 பி.டி.எஸ். சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன.இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 29 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனையடுத்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 29 ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.
காதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, துறையின் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாணவர்கள் www.tnhealth.org என்ற தமிழக சுகாதாரத்துறையின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டால் அவர்களுக்கான ரேண்டம் நம்பரை தெரிந்துகொள்ளலாம்.
பொறியியல் படிப்பைப் போன்று மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையிலும் ஒரே கட் ஆப் மார்க் பெறும் மாணவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை அளிக்க கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.