ராஜ்யசபா தேர்தல்: அதிரடியாக 6வது வேட்பாளரை நிறுத்த ஜெ. ப்ளான்?

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் அக்கட்சியின் சார்பாக தேர்வாவது உறுதியானது. எஞ்சிய எம்.எல்.ஏக்களின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிப்பதாக அதிமுக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் யார் வேட்பாளர் என்ற பெரும் குழப்பமும் நீடித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவையே மீண்டும் எம்.பி.யாக்க வேண்டும் என்று அக்கட்சியில் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால் மாநிலச் செயலர் தா. பாண்டியனோ என்னைத் தான் எம்.பி. தேர்தலில் ஜெயலலிதா நிற்க சொல்லி இருக்கிறார் என்று அடம்பிடித்து வருகிறார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சந்திப்பு இழுத்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தேமுதிகவில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்கு செல்லப் போவதாகவும் போட்டி தேமுதிக உருவாகப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதிமுக திட்டப்படி போட்டி அதிமுக உதயமாகிவிட்டால் அல்லது எம்.எல்.ஏக்கள் தாவுவது உறுதியானால் ராஜ்யசபா தேர்தல் ந்டைபெறும் 27-ந் தேதிக்கு முன்பாக ஒரு அதிரடியை நிகழ்த்தவும் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது 26-ந் தேதி அன்று 6வது வேட்பாளரையும் அறிவித்து தேமுதிக, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் கொடுப்பார் ஜெயலலிதா என்கின்ற்னர். இப்படி 6வது வேட்பாளரை நிறுத்தி வளைக்கப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஒரு மேஜிக்கை ஜெயலலிதா நிகழ்த்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆ! செஞ்சாலும் செய்வாங்கப்பா..












Click it and Unblock the Notifications