ராஜ்யசபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசில் மீண்டும் இணையுமா திமுக?

தமிழகத்தில் வரும் 27-ந் தேதி 6 உறுப்பினர்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. 23 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் திமுக, கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக தேமுதிகவின் ஆதரவைத்தான் முதலில் திமுக கோரியது. ஆனால் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தோ தமது மனைவி பிரேமலதாவுக்கோ அல்லது மைத்துனர் சுதீஷுக்கோ வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். பின்னர் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அணி மாறுவது தொடர் கதையான நிலையில் இரு கட்சிகளிடையேயான பேரம் பேசுதல் சுருதியும் குறைந்து போனது.
இதனால் காங்கிரஸ், பாமக பக்கமும் திமுக தமது பார்வையைத் திருப்பியது. அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டு கைது நடவடிக்கையில் சிக்கி இருந்த பாமகவுக்கு திமுகவின் ஆதரவு தார்மீக ரீதியாக தேவையாக இருந்தது. இதேபோல் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக வெளியேறிவிட்டதே என்று கவலைப்பட்ட காங்கிரஸுக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் திமுக- தேமுதிக இணைந்து ஒரு வேட்பாளரை எந்த கட்சி நிறுத்தினாலும் ஆதரவு நிச்சயம் என உறுதி அளித்திருக்கிறதாம்.. இப்படிச் செய்வதன் மூலம் லோக்சபா தேர்தலை திமுக- தேமுதிக- காங்கிரஸ் இணைந்து எதிர்கொள்ள முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.
இதேபோல் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கும் மற்றொரு தகவல், மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கியதில் பெரும்பாலான திமுகவினருக்கு திருப்தி இல்லை..அப்படி ஆதரவை விலக்கிக் கொண்டது ஒரு தவறான முடிவு என்பதை இப்போது அக்கட்சி உணர்கிறது.தற்போது நடைபெற்று வரும் திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தையானது லோக்சபா தேர்தலுக்கான ஒரு அணியை உருவாக்கும் என்பதுதான். இதன் வெளிப்பாடுதான் திமுக தலைவர் கருணாநிதிக்கு சோனியா காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றால் திமுக, மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளிப்படையாகவே இணையலாம்.. அல்லது இணையாமல் போவதற்கும் சாத்தியம் இருக்கலாம்.. ஆனால் உண்வு பாதுகாப்பு மசோதா, நில மசோதா நிறைவேற்றம் போன்ற மத்திய அரசுக்கான நெருக்கடியான தருணங்களில் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கவே செய்யும்...!












Click it and Unblock the Notifications