தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு தீக்குளிக்க முயன்றவர் கைது
கரூர்: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு தீக்குளிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர். இதனால் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதிக்கு வந்து பல்வேறு கட்சி விழாக்களிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கரூர் நகராட்சியில் பல்வேறு நலத் திட்டங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (ஜூன் 9ம் தேதி) காலை துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சின்னாண்டான் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டியை திறந்து வைக்க அவர் காரில் வந்தார்.
அப்போது கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி மயில்சாமி (37) என்பவர் அதிமுக கொடியை கையில் பிடித்தபடி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்க, அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்க என கூறிக் கொண்டே அமைச்சர் காரை நோக்கி ஓடி வந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி தர்மஅடி கொடுத்தனர்.
அவர்களிடம் இருந்து அந்த நபரை காபாற்றிய போலீசார் அவரை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், மயில்சாமியின் பாட்டி மருதுதாய் அம்மாளுக்கு சின்னாண்டான்கோவிலில் சொந்தமாக வீடு உள்ளது. அவர் பயன்படுத்தி வந்த 20 அடி தடபாத்தியம் குறித்து 1992ம் ஆண்டு பழனிச்சாமி என்பவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கில் மயில்சாமி மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை என கூறப்படுகின்றது. ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கரூர் நீதிமன்றத்தில் மயில்சாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் மயில்சாமி பயன்படுத்தி வந்த பாதையை பாலசுப்பிரமணியன் என்பவர் வேலி அமைத்து தடுத்துள்ளார். இது குறித்து நடவடிக்கை கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு மயில்சாமி தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என தெரிய வந்தது.
இதனையடுத்து, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறி மயில்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications