மறக்காம குடையை எடுத்துட்டுப் போங்க.. இன்னிக்கும் மழை பெய்யுமாம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் போய் விட்ட நிலையில் வெயில் இன்னும் முழுமையாக ஓயவில்லை. தொடர்ந்து வெயில் அடித்தபடிதான் உள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. அதேபோல நகரின் சில பகுதிகளிலும் லேசான மழை காணப்பட்டது.
புறநகர்ப் பகுதிகளில் ஓரளவு நல்ல மழையும், நகர்ப் பகுதிகளில் லேசான மழையும் இருந்தது. வெப்பச் சலனமே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மழை பெய்யும், சென்னையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தரைக்காற்று பலமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.