தருமபுரி சிறுநீரக மோசடி வழக்கு: சேலம் டாக்டர் கைது
சேலம்: தருமபுரி சிறுநீரக மோசடி வழக்கில் சேலத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளிகளுக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்வதில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் சிறுநீரக மோசடி தொடர்பாக சங்ககிரியை சேர்ந்த புரோக்கர் அய்யாவு (51) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெரிய மணலியை சேர்ந்த சீனிவாசன் (35), குமாரபாளையம் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ஷாஜகான் (45), சங்ககிரி கத்தேரி பகுதியை சேர்ந்த வடிவேல் (45) ஆகிய 3 புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர பணத்துக்காக சிறுநீரகம் தானம் கொடுக்க முன் வந்த பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மணியம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் கைதான புரோக்கர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த ஒரு பெண் புரோக்கர், சிறுநீரகம் விற்ற இளம்பெண் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
2-வது நாளாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இடைத்தரகர்கள் அழைத்துவரும் ஏழைகளிடம் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்தது மருத்துவர் கணேசன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிறுநீரகப் பிரிவு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கணேசனிடம் தருமபுரி காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கலக்கத்தில் மருத்துவமனைகள்
டாக்டர் கணேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியானது. டாக்டர் கணேசன் சேலத்தில் விநாயகா மிஷன் ஆஸ்பத்திரி உள்பட 13 ஆஸ்பத்திரிகளில் வேலைப்பார்த்து வந்தது தெரியவந்தது.
சிறுநீரக சிறப்பு டாக்டர் என்பதால் இவர் நோயாளிகளின் உறவினர்களுக்கு பிடித்த ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்து இருப்பது தெரியவந்தது. எனவே டாக்டர் கணேசன் வேலைப்பார்த்த அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதனால் அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் இந்த ஆபரேசன் நடத்த வாய்ப்பில்லை என்பதால் அதன் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்று டாக்டர் கணேசன் செய்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் விசாரணை நடத்தமுடிவு செய்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications