மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க கொடி மரம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 62 அடி உயர தங்க கொடி மரம் சிறப்பு பூஜைகளுடன் நிறுவப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மையாக கருதப்படுகின்றது.
இதனால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. சிவபெருமானுக்கான கோவில்களில் இந்தக் கோவில் சிறப்புடைய ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு தினமும் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஆயிரகணக்கானோர் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

இந்த கோவிலில் பழமை வாய்ந்த கொடிமரம் இருந்தது. இதில் பழுது ஏற்பட்டதால் அதனை மாற்ற திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய கொடிமரம் உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது.
புதிய கொடிமரத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க தகடு பொருத்தப்பட்டது. 62 அடி உயரத்தில் செய்யப்பட்ட தங்க கொடி மரம் ஆகம விதிப்படி கோவிலில் நேற்று நிறுவப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த விழாவில் கோவில் அறங்காவலர்குழு தலைவர் கரு.முத்து கண்ணன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications