3வது அணியில் எல்லோருமே பிரதமராக ஆசைப்படுறாங்க, இது தேறாது.. லாலு கணிப்பு

பாஜகவுக்கு எதிராக திடீரென புறப்பட்டுள்ளார் நிதீஷ் குமார். தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறி விடும் மனநிலைக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்து மமதா பானர்ஜியுடன் அவர் அவசரமாக ஆலோசித்துள்ளார். புதிய கூட்டணிக்கு அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
நிதீஷ் குமார் தரப்பை சமாதானப்படுத்த கத்காரி உள்ளிட்டோரை பாஜக களம் இறக்கியுள்ளது. இந்த நிலையில் நிதீஷுடன் இணைந்து செயல்படத் தயார் என்று சந்திரபாபு நாயுடுவும் அறிவித்துள்ளார். இதனால் தேசிய அரங்கில் புதிய பரபரப்பு புறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முயற்சி பலன் தராது என்று நிதீஷின் பரம வைரியான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். ,ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்த லாலு இதுகுறித்து கூறுகையில், 3வது அணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள்.
மமதா பானர்ஜி, ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார், முலாயம் சிங் யாதவ் என யாரை எடுத்தாலும் பிரதமராகத் துடிக்கிறார்கள். இப்படி இருந்தால் கூட்டணி உருவானாலும் கூட அது தேறாது. உடைந்து போய் விடும்.
தனது ஆட்சிக்காலத்தில் பீகார் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறிவரும் முதல்வர் நிதிஷ் குமார், மற்றொரு புறம் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இது முரண்பாடாக உள்ளது.
பாஜக தேசிய பிரசாரக் குழுத் தலைவராக மோடி உருவாகியிருப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. காரணம், அவரே ஆர்.எஸ்.எஸ்சின் முகமூடிதானே என்றார் லாலு.












Click it and Unblock the Notifications