நான் இன்னமும் தேமுதிகவில்தான் இருக்கிறேன்... மாஃபா பாண்டியராஜன்

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி பிரச்சினை குறித்து மனு கொடுத்தார் மாஃபா பாண்டியராஜன். இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட், மற்றும் கட்சி பொருளாளர் பதவியை கேட்டு விஜயகாந்தை மிரட்டி வந்தார். அதற்கு விஜயகாந்த் பணியாததால், முதல்வரை சந்தித்துவிட்டு வந்துள்ளார் என்று அக்கட்சியின் கொறடா சந்திரக்குமார் பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளதாவது: "நான் ஏழை குடும்பத்தில் பிறந்து, சொந்த முயற்சியில் சம்பாதித்த பணத்தில், மக்களுக்கு உதவினேன். அரசியலில் இருந்தால் கூடுதலாக மக்களுக்கு உதவலாம் என்பதால் அரசியலுக்கு வந்தேன். ஒருபோதும் பணம், புகழ் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை.
பா.ஜ.க.வில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். தே.மு.தி.க.வில் சேர்ந்த ஒரே ஆண்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த தேர்தலில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷை விட கூடுதலாக 16.3 சதவீதம் ஓட்டுக்களை பெற்றேன்.
கடந்த 2011 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றேன். எந்த காரணத்திற்காக அரசியலுக்கு வந்தேனோ, எம்.எல்.ஏ. ஆன பிறகு அந்த பணியை செய்ய முடியாமல் போனது. இது என்னை உறுத்தியபடி இருந்தது. மக்கள் பணியை சரிவர செய்வதற்காகவே முதல்வரை சந்தித்தேன். மற்றபடி, எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
நான் மிரட்டவில்லை
நான் கட்சியின் பொருளாளர் பதவியை கேட்டு விஜயகாந்தை மிரட்டியதாக கூறுகின்றனர். நான் அப்படி எதையும் கேட்கவில்லை. விஜயகாந்தைப் பற்றி நான் தவறாக பேச மாட்டேன். நான் எப்போதும் அர்த்தமற்ற விஷயங்களை அவரிடம் பேசியது கிடையாது. தினமும், நாட்டு நடப்புகளை மட்டுமே பேசுவோம். அதை கேட்பதில், அவர் ஆர்வமாக இருப்பார்.
கோஷ்டி உருவாக்கினார்கள்
வளர்ந்து வந்த கட்சி அழிவதற்கு, கட்சிபொறுப்பு வழங்க பணம் வாங்கியதும், கோஷ்டியை உருவாக்கியதும் தான் காரணம். அது போன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் மனிதர்களுக்கு என்னைப் பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
நான் இன்னமும் தே.மு.தி.க.வில்தான் இருக்கிறேன். வாய்ப்பு வழங்கினால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். அதை விஜயகாந்த்தான் முடிவு செய்யவேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications