குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
சென்னை: குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் தமிழர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியர்கள், தமிழர்கள் ஏராளமாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருவதை அறிவோம். மிகவும் சிரமப்பட்டு இந்தியப் பணம் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்களை நேரடியாகவோ, ஏஜண்டுகள் மூலமாகவோ கொடுத்து விசா பெற்று இவர்கள் இந்நாடுகளுக்கு வந்து மிகவும் சிரமமான சூழலில் கடும் பணிகளைச் செய்து வருகின்றனர்.
‘காதிம்', ‘சூன்' என இரு வகை விசாக்களில் இங்குள்ளவர்கள் அங்கு வேலைக்குச் செல்கின்றனர். முன்னது வீட்டு வேலைக்கான விசா. மற்றது நிறுவனங்களில் வேலைக்கான விசா. இப்படி வரக் கூடியவர்கள் தாங்கள் எந்த அரபியிடம் வீட்டு வேலை அல்லது டிரைவர் முதலான பணிகளுக்கென விசா பெற்று வந்துள்ளனரோ அந்த அரபியிடம் வேலை இல்லாமலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரிடம் அனுமதி (‘தனாசில்') பெற்று வேறு அரபி, அல்லது நிறுவனங்களில் வேலை செய்வதுண்டு. அதேபோல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள், அந்நிறுவனத்திடம் தனாசில் (அனுமதி) பெற்று வெளியே வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் முறைப்படி ‘ஸ்பான்சர்ஷிப்' பெற வேண்டும். அவ்வாறு ஸ்பான்சர்ஷிப் பெறாமல் வேறு நிறுவனங்களிலும் பலர் வேலை செய்வதுண்டு. அதேபோல வேலை அனுமதி பெற்று வந்து வேலை செய்து கொண்டிருப்போரின் மனைவிமார் முறையான வேலை அனுமதியின்றி நிறுவனங்களில் வேலை செய்வதும் உண்டு. இப்படி வேலை செய்வதை அந்நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை என்றபோதிலும் இவர்கள் முறையான விசாக்களுடன் இந்நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்கள் முன் சவூதி அரேபிய அரசு சட்டம் ஒன்றை இயற்றி (‘நிதாகத்' சட்டம்) இத்தகையோரை வெளியேற்றத் தொடங்கியது. இந்திய அரசு தலையீட்டால் இத்தகையோர் பொது மன்னிப்பு மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டனர்.
கடந்த பத்து நாட்களாக குவைத் அரசு இத்தகைய சட்டம் எதையும் இயற்றாமலேயே அதே நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் இப்படி காதிம் மற்றும் சூன் விசாக்களில் உள்ளவர்களைப் பிடித்து வெளியேற்றி வருகிறது. சாலைகளில், பணியிடங்களில், பொது இடங்களில் சோதனையிட்டு, இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களது வீடு மற்றும் உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல் அணிந்துள்ள ஆடையுடன் மும்பைக்கு இவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
உரிய பயண ஆவணங்களின்றி மும்பையில் வந்திறங்கும் இவர்களுக்கு அங்கும் பிரச்சினை. காதிம் விசாவில் வந்தவர்கள் தான் இன்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்திலிருந்து வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றன. பள்ளியில் குழந்தைக்குச் சோறூட்டச் சென்ற பெண்ணைப் பிடித்து குழந்தைக்கும், அவரது கணவருக்கும் தெரியாமல் மும்பைக்கு அனுப்பியுள்ளனர். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பிடிக்கப்படுபவர்கள் அவர்களது அறைக்குச் செல்லவும் அனுமதிக்கபடாமல் வெளியேற்றப்படுகின்றனர்.
குவைத்தில் சுமார் 6,47000 இந்தியர்கள் உள்ளனர். இதில் தமிழர்கள் மட்டும் சுமார் 1.2 லட்சம் பேர்கள் இருக்கலாம். இன்று பெரிய அளவில் தமிழர்கள், ராஜஸ்தானியர்கள், தெலுங்கர்கள் இப்படிப் பாதிக்கப்படுகின்றனர். துல்லியமான விவரங்கள் இல்லை ஆயினும் சுமார் 8000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் பெண்கள்.
இதில் மிகப் பெரிய வேதனை என்னவெனில் இது குறித்து குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்குப் புகார் அளிக்கச் சென்றால், அவர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை. பெரிய அளவில் தமிழர்கள் பாதிக்கப்படுவது அவர்களுக்குப் பொருட்டாக இல்லை. சவூதி அரசுடன் பேசி ஒரு தீர்வு கண்டதைப்போல மத்திய, மாநில அரசுகள் குவைத் அரசுடன் பேசி தீர்வு காண எந்த முயற்சியும் செய்யவில்லை.
ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநிலத்தவரின் நலன் காக்க முயற்சிகள் எடுப்பதாகவும், தமிழர்கள் நிலை குறித்துத் தான் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் கவலை கொள்ளவில்லை எனவும் குவைத் வாழ் தமிழர்கள் கூறுகின்றனர். இப்படிக் கால அவகாசம் கொடுக்காமல் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதை குவைத் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமைப்பு (Kuwait Expatriate Labour Forces - KTUF) கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஓரிடத்தில் வேலை செய்வதாக விசா பெற்று வேறோரிடத்தில் வேலை செய்பவர்களை இப்படித் தண்டிக்கும் குவைத் அரசு, பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறு அனுமதிக்கும் தன்நாட்டுக் குடிமக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு குவைத் அரசுடன் பேசி இந்நிலைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். போர்க்காலத் துரிதத்துடன் இது மேற்கொள்ளப்பட்டால்தான் துயருறும் இந்தியர்களுக்கு ஏதும் பயன் கிடைக்கும்.
சவூதியில் மேற்கொள்ளப்பட்டதைப்போல பொது மன்னிப்பு மற்றும் கால அவகாசம் ஆகியவற்றை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.வேறு எந்த மாநிலத்தவரைக் காட்டிலும் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுவதால், தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்க வேண்டும். இவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் மும்பையில் வந்து இறங்குவோர் விசாரிக்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர் திரும்ப வேண்டிய உதவிகள் செய்யப்பட வேண்டும்.
இத்தகைய பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் உள்ள குவைத்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications