மணிவண்ணனுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: மறைந்த இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் மணிவண்ணனுக்கு திரையுலகினரும், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
59 வயதான இயக்குநர் மணிவண்ணன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினரையும், திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மணிவண்ணனின் நெருங்கிய தோழர் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் மணிவண்ணன் வீட்டுக்கு விரைந்து சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மணிவண்ணன் உடலுக்கு புலிக்கொடி போர்த்தி வீர வணக்கம் செலுத்தினார்.

இசைஞானி இளையராஜா மணிவண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட இளையராஜா, மணிவண்ணன் உடலுக்கு அருகே சிறிது நேரம் நின்றிருந்தார். மணிவண்ணனின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்பது நினைவிருக்கலாம்.
நடிகர்கள் செந்தில், விஜய், சாந்தனு, இயக்குநர்கள் பாக்யராஜ், தங்கர்பச்சான், பாலா, அமீர் உள்ளிட்டோர் நடிகைகள் கோவை சரளா, வடிவுக்கரசி, சரண்யா உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினர் மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி தனது கட்சியினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது கட்சியினருடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் அஞ்சலி
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் மணிவண்ணன் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மணிவண்ணனின் மகனுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலும் கூறினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications